20/04/2010

இலங்கைக்கு பெரிய மனது: அமிதாப் பச்சன்

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து (மயான) அமைதி திரும்பி 1 வருடம் ஆனதைக் குறிக்கும் வகையில் விழாக்கள் நடத்தப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக பாலிவுட் திரைப்பட விழா ஜூன் 3இல் இருந்து 5வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு விளம்பரமாக அமிதாப் பச்சன் இலங்கைக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு செல்லவேண்டாம் என்று சில தமிழ் அமைப்புகள் கேட்டு கொண்டதாகவும் அதை அவர் நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் உலவுகின்றன. அங்கு அவர், "இலங்கை சின்ன தீவு என்று சொன்னால் நம்ப முடியவில்லை, ஏனெனில் இலங்கைக்கு பெரிய மனது, இந்த பெரிய மனதே இலங்கையை பெரிதாக்குகிறது" என்று கூறியுள்ளார். இது இயற்கையே. இலங்கையில் சிறிது வருமானம் என்றால் இந்தி திரைப்படத்துறையினர் அங்கு செல்லவே விரும்புவர். ஆனால் இன்று இந்தி திரையுலகம் பலவகையில் தமிழ் படைப்பாளிகளை நம்பி உள்ளது. எடுத்துக்காட்டாக சென்ற வருடம் இசைக்கான பாலிவுட் திரைப்பட விருது ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அது போல முருகதாஸ், மணிரத்னம் போன்றோர் பாலிவுட் உலகில் இன்று வலம் வந்தாலும் இது போன்ற விடயங்களில் இவர்கள் சொல்வது அங்கு மிகவும் எடுபடாது என்பது புரிகிறது. ஆனால் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஜூன் 3-5 கொழும்பில் நடைபெறும் விழாவில் தமிழ் திரைப்படத்துறையினர் யாரும் கலந்து கொள்வார்களா என்பது. பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்தி: இந்து நாளிதழ்

17/04/2010

செம்மொழி வளர்க்கும் அழகு

சென்னை மாநகராட்சி தமிழில் பெயர்ப்பலகைகளை வைக்க வேண்டும் என்று வணிகர்களைக் கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்காக 537 ஆங்கில வணிகச் சொற்களுக்கு ஏற்ற தமிழ் சொற்கள் அடங்கிய பட்டியல் செய்து விநியோகம் செய்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒன்றே.

ஆனால் தமிழக அரசு செம்மொழி வளர்க்கும் அழகு என்ன? சென்னையில் அனைத்து பெருந்துகளிலும் செம்மொழி மாநாட்டின் நாட்கள் 'சூன் 23-27' என்றும் ஆண்டு 2010 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஏன்? தமிழில் மாதங்கள் உள்ளன என்பதும் இந்த நாட்கள் தமிழ் மாதக்கணக்கில் ஆனி 9-13இல் வரும் என்பதும் திருவள்ளுவர் ஆண்டு 2041 என்பதும் செம்மொழி வளர்ப்பவர்களுக்கு தெரியவில்லையோ?

நோக்கம் சரியாக இருந்தால் செயலும் சரியாக இருக்கும். நம்முடைய நோக்கம் இன்னொரு பாராட்டு விழா தானே? இத்தகைய ஒரு மாநாட்டுக்கு வருகை தரும் உலகத் தமிழறிஞர்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்போம். தமிழை தூக்கி நிறுத்த வரும் தன்மானச் சிங்கங்கள் அவர்கள்!

14/04/2010

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த புது வருடத்தில் அனைவரும் எல்லா நலனும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.தமிழும் தமிழரும் பெருமை பெற்று வாழ இறைவனை வணங்குவோம்.

15/03/2010

பகுத்தறிவும் பஞ்சாங்கமும்

குப்பன்: என்ன சுப்புடு, எங்க கிளம்பிட்டீங்க?

சுப்புடு: நாளைக்கு தெலுங்கு வருசப்பிறப்பு தெரியாதா? அதான் சாமான் வாங்க போறேன்.

குப்பன்: அப்ப நாளைக்கு ஆபீஸுக்கு மட்டமா?

சுப்புடு: இதென்ன குப்பா அசட்டுத்தனமான கேள்வி? நாளைக்கு தமிழ்நாடு அரசாங்க விடுமுறை, தெரியாதா?

குப்பன்: (பக்கத்தில் நிற்கும் அரசியல் பிரமுகர் தமிழ்ச்செல்வனிடம்) என்ன அண்ணாச்சி நீங்க தானே சொன்னீங்க "தமிழர்க்கு தை முதல் நாளே புது வருடம்"னு.

தமிழ்ச்செல்வன்: அது தமிழனுக்கு தான்லே, அவன் தெலுங்கன்லா.

குப்பன்: (உணர்ச்சிவசப்பட்டு) அப்ப தமிழ்நாட்டுல எதுக்கு தெலுங்கு வருசப்பிறப்புக்கு லீவு விடுறீங்க?

தமிழ்ச்செல்வன்: (கோபமாக, 'கில்லி' பிரகாஷ்ராஜ் ஸ்டைலில்) ஏய், இதெல்லாம் நீ கேக்கக்கூடாது. நீ ஏன் கேக்கிற?

குப்பன்: (பக்கத்தில் நிற்கும் அருவா ஆறுமுகத்தை பார்த்தவுடன் ஆட்டோமெடிக்கா ஆஃப் ஆகி) ஆமா அண்ணாச்சி, நீங்க சொல்லுறதில நியாயம் இருக்கு. நாமெல்லாம் தமிழர்கள், பகுத்தறிவு பேச வேண்டியவங்க. பஞ்சாங்கத்த தூக்கி குப்பையில போடணும்.

தமிழ்ச்செல்வன்: ஆமா ஞாபகம் வச்சுக்கோ. அப்ப தான் அடுத்த வருசமும் மெட்ராசுல போயி நீ நையாண்டி மேளம் அடிக்க ஏற்பாடு பண்ணுவேன். சென்னை சங்கமம்! ஞாபகம் இருக்குல்லா?

குப்பன்: ஆமா அண்ணாச்சி அடுத்த வருசம் பொங்கல் இங்கிலீசுக்கு எந்த தேதி வருது? காலேண்டர்ல இந்த வருசம் முடிஞ்சு போன பொங்கல் தானே போட்டிருக்கு?

தமிழ்ச்செல்வன்: அதுக்கு இப்பவே என்னலே அவசரம்? வேணும்னா பஞ்சாங்கத்த எடுத்துப் பாரு? எல்லா காலேண்டர்லயும் பஞ்சாங்கத்த பார்த்து தான பொங்கல் ஜனவரி 13ஆம் தேதி வருதா, 14ஆம் தேதி வருதான்னு போடுறாங்க? நாங்க அரசாங்கத்துல கூட அத பார்த்துதாம்ல பொங்கல் விடுமுறையெல்லாம் விடுறோம்.

குப்பன்: சரியண்ணே. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். பஞ்சாங்கத்த எடுத்து பார்க்கிறேன்.

தமிழ்ச்செல்வன்: சரி சரி எனக்கு வேல இருக்கு. அப்புறம் பார்ப்போம்.

குப்பன்: சரியண்ணே. பகுத்தறிவு வாழ்க.

தமிழ்ச்செல்வன்: பகுத்தறிவு வாழ்க!

குப்பன்: (இந்த உரையாடலில் மெய்மறந்து நின்று விட்ட சுப்புடுவிடம்) அண்ணாச்சி நல்லவரு தான். பாலமெல்லாம் நிறைய கட்டுறாக. ஆனா என்ன, நம்மள மாதிரி சாதாரண ஜனங்ககிட்ட எப்பப் பார்த்தாலும் பகுத்தறிவப் பத்தி பேசினா, நமக்கு எங்க மண்டையில ஏறும்? நமக்கு புரியாம ஏதாவது ஏடாகூடமா கேட்டுத் தொலைச்சிடறோம்.

05/03/2010

காற்று எப்போது வரும்?

திருமந்திரம் என்பது சைவத்திருமுறைகளுள் ஒன்று. அதை எழுதிய திருமூலரின் கதையை சிறிது பார்ப்போம். கூடு விட்டு கூடு பாய்வதில் வல்லவரான திருமூலர் மூலன் என்ற இடையனின் உடலில் இருந்து உபதேசம் செய்ததால் அவர் பெயர் திருமூலர் என்று ஆயிற்று. பலமுறை கூடுவிட்டு கூடு பாய்ந்து 3000 வருடம் வாழ்ந்ததாகக் கூறப்படும் அவரது இயற்பெயர் தெரியவில்லை.

ஒருநாள் திருமூலர் ஒரு நாட்டின் தலைநகர் வழியே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த நாட்டின் அரசி அழுவது அவர் காதில்  விழுந்தது. அந்த பெண் அரசனை சிறிது வருடங்களுக்கு முன்பு தான் மணமுடித்தாள் என்பதும் அந்த அரசன் இப்போது இறந்து விட்டான் என்பதும் இவருக்கு தெரிந்தது. அந்த பெண்ணின் மீது இரக்கம் கொண்ட அவர் உடனே தனது சீடர்களை அழைத்து கொண்டு போய் அருகில் உள்ள ஒரு குகையில் வைத்து, தான் சில காலங்களுக்கு அந்த அரசனின் உடலில் இருந்து அந்த பெண்ணை சிறிது சிறிதாகத் தேற்றி விட்டு பின்னர் தன்னுடைய உடலுக்கு வருவதாகவும் அதுவரை தனது பதப்படுத்தப்பட்ட உடலுக்கு சீடர்கள் காவலாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சீடர்களோ, "குருவே நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது எனவே ஒவ்வொரு பௌர்ணமியன்றும் நீங்கள் வந்து உங்கள் முகத்தைக் காட்டினால் தான் எங்களுக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெரியும்" என்று கூறினர். திருமூலரும் அதற்கு சம்மதித்தார்.

அரசனின் உடலில் நுழைந்த திருமூலர் தான் இறக்கவில்லை என்றும் சிறிது மூர்ச்சையடைந்து விட்டதாகவும் கூறி அனைவரையும் நம்ப  வைத்தார். அரசியும் அதை நம்பினாள். ஆனால் சிறிது நாட்களில் அவளுக்கு சந்தேகம் துளிர் விட்டது. முன்பு போல இல்லாமல் இப்போதெல்லாம் அரசன் மன்மதக் கலையில் மிகவும் தேர்ந்தவனாக இருக்கிறானே, எப்படி? என்று எண்ணினாள். ஒவ்வொரு பௌர்ணமியும் அரசன் எங்கோ செல்வது வேறு அவளுக்கு சந்தேகம் உண்டாக்கியது. ஒரு நாள் அவளது வேலைக்காரியை அழைத்து அரசனை பின் தொடர்ந்து எங்கு செல்கிறான் என்று அறிந்து வரச்சொன்னாள். ஒரு பௌர்ணமியன்று அரசனைப் பின் தொடர்ந்த வேலைக்காரி உண்மையை அறிந்து அரசியிடம் சொன்னாள். உண்மையை அறிந்த அரசி முனிவரை அரசனின் உடலில் இருந்து விடுவதில்லை என்று முடிவு செய்தாள். அடுத்த பௌர்ணமியன்று அரசனை அந்தப்புரத்தில் வைத்து அவன் அன்று பௌர்ணமி என்பதையே மறந்து போகும் அளவுக்கு தன்னுடைய வலையில் பின்னி வைத்தாள். அதே நேரம், காத்திருந்து பார்த்த சீடர்கள் முனிவருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று எண்ணி உடலை குகையில் விட்டு சென்று விட்டனர். சரியான நேரத்தில் அங்கு சென்ற வேலைக்காரி அந்த உடலுக்கு தீ மூட்டினாள். வெகு நேரம் கழித்தே தன்னிலைக்கு வந்த முனிவர் குகைக்கு ஓடினார். அங்கு தன்னுடைய உடல் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து கதறினார். "ஐயோ பெண் மீது மோகம் கொண்டு சீரழிந்தேனே" என்று அழுதார். பின்னர் தன்னுடைய நிலையை எண்ணி வருந்திக்கொண்டே நடந்த போது வழியில், தவறான முறையில் பிராணாயாமம் செய்து உயிரிழந்த ஒரு பிராமணச் இளைஞனின் உடலைக் கண்டார். அரசனின் உடலை நீத்து இளைஞனின் உடலில் நுழைந்தார்.

இந்தக் கதை சித்தர் திருக்கோவை என்ற நூலில் உள்ளது. இது போலத் தான் விசுவாமித்திரரும். அவர் தவம் செய்கையில் மேனகை வந்து அவரது தவத்தைக் கலைத்து அவரோடு குடும்பம் நடத்தினாள் என்பது கதை.

இப்போது விஷயத்துக்கு வருவோம். நித்தியானந்தா என்ற இளைஞன் காவியுடையில் இருந்துக்கொண்டு காமம் கொண்டான் என்பது இ.பி.கோ.வில் ஏதோ ஒரு பிரிவின் படி தவறு என்பது போல இங்கே பலர் குதிக்கின்றனர். அது இந்து மதத்துக்கு அவர் செய்த அவமானம் என்று இந்து மாக்கள் கட்சியினரும் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்று பத்திரிக்கையினரும் கூறுகின்றனர். தமிழக காவல் துறையும் அவர் மீது பித்தலாட்டக் கேஸ் போட்டிருக்கிறது.

இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். அவர் செய்தது எல்லாமே அவரது படுக்கையறையில், அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன். இரண்டு வயது வந்தவர்கள் தங்களுடைய ஆசையை இருவரின் முழு சம்மதத்துடன் தீர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று தான் இந்திய நாட்டின் சட்டம் சொல்கிறது. அதே சட்டத்தில் அடுத்தவரின் படுக்கையறை நிகழ்வுகளை வேவு பார்ப்பது (voyeursim) தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இங்கு சட்டப்படி நடவடிக்கை என்று எடுத்தால் அது யார் மீது எடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

அவர் சாமியார் என்று சொல்லி ஏமாற்றினார் என்று  கூறுவது மடத்தனம். அவர் இதைச் செய்துத் தருகிறேன் அதைச் செய்துத் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. அப்படி ஏதும் இருந்தால் அதற்கு இவ்வளவு காலம் காத்திருந்ததே தவறு. உதாரணமாக பெங்களூருக்கு அருகே உள்ள அவரது ஆசிரமம் ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்க நிலத்தில் உள்ளது என்று கர்நாடக அரசு தெரிவித்து உள்ளது. அது இப்போது தான் அவர்களுக்குத் தெரிந்ததா? இத்தனை நாளும் என்னை செய்துக் கொண்டிருந்தது கர்நாடக அரசு?

இந்து மதத்துக்கு இழுக்கு என்று குதிப்பவர்கள் மேலே உள்ள கதையைப் படித்துப் பார்த்தாலேயே விளங்கும். காமம் என்பது திருமூலர் போன்ற முனிவர்களால் கூட வெல்ல இயலாதது என்பது இந்து மதத்தில் எப்போதுமே பல கதைகள் மூலம் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. நித்தியானந்தா போன்ற சிறுவன் அதை வென்று விட்டான் என்று எண்ணி அவன் பின்னால் சென்றால் அது மக்களின் மடத்தனம். அவர் காவி உடையில் இருந்துக் கொண்டு அதைச் செய்தது தவறு என்று கூறுபவர்கள் அவர் அதை தனது படுக்கையறையில் தான் செய்தார் என்பதையும் அதனை ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்பது அவருக்கு தெரியாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் நாட்டு பத்திரிக்கைகளுக்குக் கொண்டாட்டம் தான். யானை இருந்தாலும் பொன் இறந்தாலும் பொன் என்பது போல. முதலில் "கதவைத் திற, காற்று வரட்டும்"  என்று கட்டுரை வெளியிட்டவர்கள் இனி "மூடிய கதவு, உள்ளே சாமியாரும் நடிகையும்..." என்று எழுதுவார்கள். இவர்கள் தான் தமிழனைத் தூக்கிப் பிடிப்பவர்கள். "பிரபாகரன் இருக்கிறார்" என்று ஆறு மாதத்தைக் கடத்துவார்கள், பின்னர் "பிரபாகரன் இறந்தது எப்படி" என்று ஆறு மாதம் கடத்துவார்கள், பின்பு "பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா?  தொடரும் மர்மம்" என்று தொடருவார்கள்.

இனி நித்தியானந்தா செய்ய வேண்டியது என்ன? அது பொய், மாயை என்றெல்லாம் கூறுவதை விடுத்து நடந்ததை ஒப்புக்கொள்வது தான் அவருக்கு நல்லது. அப்படி ஒப்புக் கொண்டு தன்னுடைய படுக்கையறையில் நடந்ததை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் மீது வழக்குத் தொடர்ந்தால் தொலைக்காட்சிகள் மீது சட்டம் பாய நிறையவே வாய்ப்பு உள்ளது. அதோடு காவி உடையைக் களைந்து விட்டு ஒரு சாதாரண மனிதனாக வாழ்வது தான் சரி.

நித்தியானந்தாவை இத்தனை நாளும் நம்பிய மக்கள் அதனை நினைத்து வருந்தத் தேவையில்லை. ஒரு சின்ன ஜென் கதை. ஒரு ஊரில் ஒரு போலி ஜென் சாமியார் இருந்தார். ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரன் அவரைப் பார்க்க வந்தான். அவரிடம் அவன் பல தத்துவக் கேள்விகளைக் கேட்டான். அவரோ மௌன விரதம் இருப்பது போல நடித்தார். அவன் அவர் ஒவ்வொரு கேள்விக்கும் விதவிதமாக முழிப்பதைக் கண்டு தானே அதில் இருந்து விடையைக் கற்பனை செய்துக் கொண்டு "ஆகா, இந்தக் கேள்விக்கு இது தான் விடையா? ஆகா, என்ன ஞானம் சுவாமி" என்று ஒவ்வொரு கேள்விக்கும் தானே சரியான விடையைச் சொல்லி பாராட்டினான். அவன் சென்ற பின் சீடர்கள் "சுவாமி எப்படி அவன் கேள்விக்கு சரியாக விடை சொன்னீர்கள்?" என்று கேட்டனர். அதற்கு அவர் "நான் எங்கே சொன்னேன், ஞானம் என்பது அவனுக்கு உள்ளேயே இருக்கிறது, அதை அவன் என் மூலமாக அறிந்து கொண்டான்" என்று கூறினார். நல்லது என்பது நித்தியானந்தா சொன்னாலும் சரி நமீதா சொன்னாலும் சரி, எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

இது ஏமாற்று வேலை, பித்தலாட்டம் அவரை தூக்கில் போட வேண்டும் என்றெல்லாம் கத்துபவர்களுக்கு - எனது கல்லூரி ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்வார், "கேப்பையில நெய் வடியுதுன்னா கேட்கிறவனுக்கு எங்க போச்சு?".

02/03/2010

நீல மணி போன்ற பூமி, நடுவே இந்தியா


இதுவரை காணாத தெள்ளத் தெளிவான படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அளவில் பெரிய படங்கள் நாசாவின் flicker பக்கத்தில் இருக்கின்றன.

09/02/2010

தடித்த தமிழகம்?

ஜெயராமின் 'கறுத்த தடித்த' பேச்சு நம்மில் பலருக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.  சீமான் சிறுத்தை போல சீற அவரது அன்புத் தம்பிகள் சிலர் ஜெயராமின் வீட்டிற்குச் சென்று தமிழனின் வீரத்தை நிலைநாட்டிவிட்டு வந்தனர். என்னதான் இருந்தாலும் இருவரும் திரைத்துறையை சார்ந்தவர்கள் அல்லவா, தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் அல்லவா?எனவே சீமான், "ஜெயராம் வீரத்திலும் அறிவிலும் உலகத்திற்கே முன் மாதிரியாகத் திகழும் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திப் பேசியிருக்கின்றார" என்று கூறியிருக்கிறார். ஏதோ தமிழகப் பெண்கள் வீரத்திலும் அறிவிலும் சிறந்தவர்கள் என்பதால் அவர்கள் அழகில் குறைந்தாலும் தப்பில்லை என்பது போல.

 

உண்மையில் தமிழகப் பெண்கள் அழகில் குறைந்தவர்களா என்ன? தமிழ்ப் பெண்களிடம் உள்ள அழகை பொதுவாக வேறு எந்த பெண்களிடமும் பார்க்கமுடியாது. ஆண்களை பைத்தியமாக்கி அலையவிடும் அழகு தமிழ்ப் பெண்களிடம் மட்டும் தான் இருக்கிறது, அதை வேறு எங்கும் காண முடியாது. ஆனால் இன்று உள்ள நிலைமையில் முக்கியமாக சென்னை போன்ற நகரங்களில், image தமிழ்ப் பெண்களின் அழகு வெகு வேகமாக சீர்கெட்டு வருகிறது. கறுப்பு என்பது அழகு தான். எனவே இப்போது அதைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை. ஆனால் பருமனாக இருப்பது நல்லதல்ல. நாம் பார்ப்பதில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை விட மிகவும் அதிகமான எடை கொண்டவர்களாக இருக்கின்றனர். இந்தியாவிலேயே மிகவும் அதிக எண்ணிக்கை பருமனான மக்கள் சென்னையில் தான் இருக்கின்றனர் என்று தமிழக அரசே அறிவித்து விட்டது. 10 வயது சிறுவன் கூட கட்டுக்கடங்காத எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் 30 வயதுக்கு மேல் தொப்பையில்லாத ஆண்களைப் பார்ப்பது தான் அரிதாக இருக்கும். ஆனால் இப்போது பெண்கள் பலரும் 25 வயதுக்கு மேலேயே இரண்டு மடங்கு பெரிதாகி விடுகின்றனர். இதற்குக் காரணம் என்ன?

 

நமது உணவுப் பழக்கம் பெருமளவு மாறிவிட்டது. முன்பெல்லாம் கேப்பை, கம்பு, சோளம் போன்றவை அதிக அளவில் உண்ணப்பட்டன. இப்போது அவை தீண்டத்தகாத தானியங்கள் ஆகிவிட்டன. எப்போதும் ஒரே அரிசி, அரிசி, அரிசி. காலையில் இட்லி, மதியம் சோறு, இரவு தோசை. அவ்வப்போது சப்பாத்தி. காய்கறி சாப்பிடுவது குறைந்து எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவது அதிகரித்து விட்டது. ஒரு நாளுக்கு 5 மடங்கு பழங்கள் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு ஆப்பிள் என்பது ஒரு மடங்கு. ஒரு கோப்பை பழரசம் ஒரு மடங்கு (ஆனால் ஒன்றுக்கு மேல் குடிக்கக்கூடாது). நம்மில் எத்தனை பேர் பழங்கள் அதிகமாக சாப்பிடுகின்றோம்? பழங்கள் அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கூட வராது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நோய் வரும் முன்பே சாப்பிட வேண்டும், வந்த பின் அல்ல. உப்பு குறைவாகவே சேர்க்கவேண்டும். நம்மில் பலர் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நொறுக்கு தின்னும் முன் யோசித்திருக்கிறோமா? இருப்பது போதாது என்று இப்போது  வடநாட்டில் இருந்து 'சாட்' வேறு இறக்குமதி ஆகிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு?

குடிக்கக் கூடாது, புகைப்பிடிக்கக் கூடாது என்று விளம்பரம் செய்யும் அரசாங்கம் எதைக் குடிக்க வேண்டும், எதைத் தின்ன வேண்டும் என்பதையும் விளம்பரம் செய்ய வேண்டும். உதாரணமாக பிரிட்டனில் அரசு மருத்துவத்துறை தனது வலைத்தளத்தில் எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது, ஆரோக்கியமாக வாழ என்ன வழிமுறைகள் என்று எல்லாவற்றையும் போட்டுள்ளது. அதைப் போல தமிழக அரசு மக்களிடமும் குழந்தைகளிடமும் சரியான உணவுமுறைக் குறித்த அறிவைப் பரப்பாவிட்டால் தமிழகம் விரைவிலேயே தடித்து வெடித்து விடும் அபாயம் இருக்கிறது.

 

குறிப்பு: பிரிட்டன் மருத்துவத்துறையின் இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.